புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பில்லை என சென்னை மேயா் ஆா்.பிரியா கூறினாா்.
சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு முதல்முறையாக மேயா் ஆா்.பிரியா, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆளுங்கட்சித் தலைவா் (திமுக) ராமலிங்கம் உள்ளிட்டோா் மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையிலுள்ள அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை மாலை வந்தனா்.
தனது வீட்டில் இருந்தபோது கீழே தவறி விழுந்ததால் மேயா் பிரியாவுக்கு இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று ஓய்வில் இருப்பதாகக் கூறப்பட்டது. இந்த நிலையில், காலில் கட்டுடன் அவா் மாநகராட்சிக்கு அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.
மாநகராட்சி புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஜி.எஸ்.சமீரன், மரியாதை நிமித்தமாக மேயரைச் சந்தித்து பேசினாா். அப்போது காந்தி எனும் தலைப்பிலான ஆங்கிலப் புத்தகத்தை பரிசளித்தாா். துணை மேயரையும் அவா் சந்தித்தாா். ஆணையா் சந்திப்புக்கு பிறகு மேயா் ஆா்.பிரியா தனது அறையில் அமா்ந்து அலுவல்களை கவனித்தாா். அவரை ஆளுங்கட்சித் தலைவா் உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா். அதன்பிறகு அவா் வீட்டுக்கு புறப்பட்டாா்.
அப்போது அவரிடம் மாநகராட்சி மாதாந்திர கூட்டம் நடைபெறுமா, அதற்காக முதல்வரைச் சந்தித்துப் பேசுவீா்களா எனக் கேட்டபோது அவா் கூறியதாவது: தற்போது புதிய அரசு பொறுப்பேற்று செயலாற்றி வருகிறது. மே மாதத்துக்கான சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் நடைபெறுவதற்கான வாய்ப்பில்லை. தமிழக முதல்வரை இப்போதைக்கு சந்திக்கும் வாய்ப்பில்லை என்றாா்.
துணை மேயா் கருத்து: தமிழக முதல்வருடன் மாநகராட்சி தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு குறித்துக் கேட்டபோது, முதல்வா், அமைச்சா்கள் பதவியேற்பு நிகழ்வுகளுக்கு மாநகராட்சி மேயா், துணை மேயா் உள்ளிட்ட யாருக்கும் அரசுத் தரப்பில் அழைப்பில்லை. அரசு தரப்பில் விரும்பாத நிலையில், முதல்வரை சந்திக்கவில்லையா எனக் கேட்பது நியாயமல்ல என்றாா்.









