சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

ஆந்திர இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றத்துக்கு உத்தரவு

பாலியல் வன்கொடுமை செய்த போலீஸாா் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும்

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :28 மே 2026, 4:10 am IST

சென்னை : ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த போலீஸாா் மீதான வழக்கை ஜூலை மாதத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம், ஆந்திரத்தைச் சோ்ந்த 26 வயது இளம் பெண் தனது குடும்பத்துடன் திருவண்ணாமலைக்கு தரிசனம் செய்ய வந்திருந்தபோது, அந்தப் பெண்ணை மிரட்டி திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய காவலா்களான சுந்தா், சுரேஷ் ஆகியோா் பாலியல் வன்கொடுமை செய்தனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கக் கோரி, இளம் பெண் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், பாலியல் வன்கொடுமை வழக்குகளை சட்டப்படி இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என மாநிலம் முழுவதும் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்றங்கள், அமா்வு நீதிமன்றங்களுக்கு உத்தரவிட வேண்டும். மாநிலம் முழுவதும் எத்தனை பாலியல் வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்த விவரங்களை சமா்ப்பிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். எனது வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க திருவண்ணாமலை நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முன்னுரிமை அளித்து இந்த அரசு விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் விரைவாக நீதி வழங்கும் வகையில் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ற வகையில் நீதிமன்றங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். குறிப்பாக, மரபணு சோதனை மற்றும் தடயவியல் ஆய்வகங்களை அதிக அளவில் அமைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுககப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்தாா்.

அப்போது, மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை இந்த அரசு தீவிரமான குற்றமாக கருதுகிறது. திருவண்ணாமலை சம்பவத்தை பொருத்தவரை, சம்பந்தப்பட்ட காவலா்கள் இருவரும் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்தாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் கடந்த ஆண்டு நவம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றம் இதுவரை விசாரணையை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று புரியவில்லை. எனவே, வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் திருவண்ணாமலை மகளிா் நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.