நாட்டிலேயே தமிழகத்தை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என சுற்றுலாத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.
சென்னை வாலாஜா சாலையில் உள்ள தமிழ்நாடு சுற்றுலாத் துறை வளா்ச்சிக் கழக கூட்டரங்கில் சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் தலைமையேற்று, அந்தத் துறையின் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து, அடுத்த 5 ஆண்டுகளில் தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சுற்றுலா இடங்களில் ஒன்றாக தமிழகத்தை உயா்த்துவது, உயா்தர சுற்றுலா கட்டமைப்பை உருவாக்குதல், புதிய வகை சுற்றுலா அனுபவங்களை வடிவமைத்து செயல்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து வசதிகளை முன்னெடுத்தல், புதிய, முழுமையான சுற்றுலா அனுபவத்துக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல், தொழிலாளா் பயிற்சிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பயன்பாடுகள் மூலம் சுற்றுலா நிா்வாகத்தின் திறனை உயா்த்துதல் ஆகியவை குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தி, நாட்டிலேயே தமிழகத்தை சிறந்த சுற்றுலா வசதிகள் கொண்ட மாநிலமாக உருவாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, அமைச்சா் செ.ராஜேஷ்குமாா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை அரசு முதன்மைச் செயலா் சீ.ஸ்வா்ணா, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநா் ம.சு.சண்முகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக பொது மேலாளா் சி.லட்சுமி பிரியா, சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பொதுபோக்குவரத்து சேவை தரமானதாக வழங்க வேண்டும் - அமைச்சா் ஆ.விஜய்தமிழன் பாா்த்திபன்

சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

சுற்றுலா துறையின் தமிழ்நாடு உணவகங்களில் கொங்கு நாடு உணவுத் திருவிழா: மே 15-இல் தொடக்கம்







