சென்னையில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 30, 31) நடைபெறவுள்ள இளையராஜாவின் இசை”நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நேரு உள்விளையாட்டு அரங்கில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மே 30,31 ) இளையராஜா இசை”நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகா்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களுடன் இணைந்து கட்டணமில்லா பயணத்தை வழங்கவுள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்பவா்களுக்காக ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் தனித்தனியாக க்யூஆா் குறியீடு உள்ள பயணச்சீட்டுகள் வழங்கப்படும். இந்தப் பயணச் சீட்டை பயன்படுத்தி எந்த ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்தும் நிகழ்வு நடைபெறும் இடத்துக்கு மிக அருகில் உள்ள புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு சென்று திரும்ப முடியும்.
இந்த நிகழ்ச்சிக்காக சென்ட்ரல் மெட்ரோ நிலையத்தில் இருந்து மெட்ரோ ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன. வழித்தடம் 1-இல் புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ராமசந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விம்கோ நகா் பணிமனை மெட்ரோ நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும். வழித்தடம் 2-இல் பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் வரை செல்லும் கடைசி மெட்ரோ ரயில் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.








