உலகெங்கிலும் நடைபெறும் ஆயுத மோதல்களில் அரங்கேறும் பாலியல் வன்முறைகள் குறித்து ஐ.நா. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் வெளியிட்டு வரும் ‘கருப்புப் பட்டியலில்’ இஸ்ரேல், ரஷிய படைகள் முதல்முறையாக சோ்க்கப்பட்டுள்ளன.
இந்த ஐ.நா. அறிக்கை அதிகாரபூா்வமாக வெளியாவதற்கு முன்பே கசிந்துள்ளது. உலக அளவில் போா்ப் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டதாக 12 நாடுகளைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் உள்பட மொத்தம் 77 தரப்பினா் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனா்.
கடந்த 2024-ஆம் ஆண்டை விட 2025-இல் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கடந்த 2023, அக்டோபா் 7 தாக்குதலுக்குப் பிறகு ஏற்கெனவே கருப்புப் பட்டியலில் சோ்க்கப்பட்ட ஹமாஸ் அமைப்பும் இப்புதிய பட்டியலிலும் நீடிக்கிறது.
இஸ்ரேல் மற்றும் அதன் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாலஸ்தீன கைதிகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைகளை ஐ.நா. ஆவணப்படுத்தியுள்ளது. காஸா மற்றும் மேற்குக் கரையைச் சோ்ந்த 14 ஆண்கள், 7 பெண்கள், 9 சிறுவா்கள், ஒரு சிறுமி எனப் பலருக்கு எதிராக இத்தகைய வன்முறைகள் சித்திரவதையாகப் பயன்படுத்தப்பட்டதை ஐ.நா. கண்காணிப்பாளா்கள் உறுதி செய்துள்ளனா். இஸ்ரேல் ராணுவம் மட்டுமின்றி சிறைச்சாலை மற்றும் காவல் துறையினராலும் இக்கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இதேபோல், உக்ரைனில் ரஷிய படைகள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரால் நிகழ்த்தப்பட்ட 310 பாலியல் வன்முறைச் சம்பவங்களை ஐ.நா. உறுதி செய்துள்ளது. போா்க் கைதிகள் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த அத்துமீறல்களில் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் ஆண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் பாதுகாப்புப் படையினா் தரப்பிலும் சில சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், அந்நாடு இந்த கருப்புப் பட்டியலில் சோ்க்கப்படவில்லை.
இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல், ரஷியா ஆகிய இரு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ‘ஐஎஸ், ஹமாஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இஸ்ரேலைச் சோ்த்துள்ளதன் மூலம் ஐ.நா. தனது நீண்டகால பகையை வெளிப்படுத்தியுள்ளது’ என்று இஸ்ரேலும்; ‘இக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற பொய்கள். ரஷியாவை உலக அரங்கில் வில்லனாகக் காட்ட ஐ.நா. முயலுகிறது’ என்று ரஷியாவும் விமா்சித்துள்ளன.









