திருக்கழுகுன்றம் ஊராட்சியில் அடங்கிய கல்பாக்கம், புதுப்பட்டினம் அருகில் உள்ள கொடங்கான் ஏரி தற்போது பெய்த மழையில் நிரம்பியதால் உபரிநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. இதனால் புதிதாக அமைக்கப்பட்ட தார்ச் சாலையை வட்டார வளர்ச்சி நிர்வாகம் உடைத்ததால் போக்குவரத்துக்கு வழியின்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டை அடுத்த திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 25 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட கொடங்கான் ஏரி, திருக்கழுகுன்றத்தை அடுத்த கல்பாக்கம், புதுப்பட்டினம், வாயலூர் காரைத்திட்டு பகுதியின் பிரதான சாலை அருகில் உள்ளது. இந்நிலையில், புதுப்பட்டினம் -காரைத்திட்டு பகுதியில் புதிதாக தார்ச் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அங்கு மழைநீர் வடியும் வகையில் சிறுபாலம் அமைக்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் அவ்வாறு செய்யாமல் தார்ச் சாலை மட்டும் போடப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் தார்ச் சாலை போடப்பட்டு 1.5மாதமே ஆன நிலையில், கடந்த ஒருவாரமாக பெய்த கனமழையில் அங்குள்ள கொடங்கான் ஏரி நிரம்பியது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் வெளியேற வழியின்றி அங்குள்ள குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்தது. சிறுபாலம் அமைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. தண்ணீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இதையடுத்து, தண்ணீரை வெளியேற்ற திருக்கழுகுன்றம், புதுப்பட்டினம் ஊராட்சி நிர்வாகம் தார்ச் சாலையை உடைக்கப்பட்டது. பின்னர், தண்ணீர் மெல்ல மெல்ல வெளியேறியது. சாலை உடைப்பு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாற்காலிகமாக அங்கு மரப்பலகை மற்றும் குழாய் அமைக்கப்பட்டது.
இதுகுறித்து பொதுமக்களுடன் முன்னாள் எம்எல்ஏ தனபால், ஊர்ப் பிரதிநிதி கிங் உசேன் உள்ளிட்டோர் திருக்கழுகுன்றம் வட்டார வளர்ச்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, தாற்காலிகமாக குழாய் மற்றும் பலகை போட்டு தருவதாகவும், பின்னர் சிறுபாலம் அமைத்து சாலையை சீரமைத்து தருவதாகவும் உறுதியளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.