எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

செங்கல்பட்டில் குடிநீருடன் கழிவுநீர் கலப்பு : மக்கள் அவதி

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சியால் 10 நாள்கள் முதல் 16 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் மக்கள் பெரிதும்

Updated On :24 ஜூலை 2018, 4:47 am IST

செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகராட்சியால் 10 நாள்கள் முதல் 16 நாள்கள் இடைவெளியில் சுழற்சி முறையில் விநியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கல்பட்டு நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் சுழற்சி முறையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. 
தற்போது 15 நாள்களுக்கு ஒருமுறை நகராட்சியால் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீரும் கலந்து வருவதால் சுகாதாரச் சீர்கேடும் வயிற்றுப்போக்கு, தோல்நோய் உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உருவாகி வருகிறது. இதுபற்றி நகராட்சி அலுவலகத்திலும் ஆணையரிடமும் பலமுறை புகார் செய்தும் பயனில்லை. 
நகராட்சி அதிகாரிகளிடம் இது பற்றிக் கேட்டபோது நகராட்சியில் ஆள் பற்றாக்குறை உள்ளது. பழுதான மின்மோட்டார்களை சீரமைக்க இயலாமல் நிதி பற்றாக்குறை உள்ளது. பணிகள் சீரடையும் வரை பொதுமக்கள் லாரி குடிநீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று கூறுகின்றனர். 
ஆனால், செங்கல்பட்டு நகரில் வசிக்கும் பெரும்பாலோர் வீடுகளில் வாடகைக்கு வசிப்பவர்கள் ஆவர். அவர்கள் குடும்பச் செலவை சமாளிக்கவே குடும்பத்தில் அனைவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 
குடிநீர் லாரி வரும் நேரத்தில் வேலைக்குச் செல்வோர் தண்ணீரைப் பிடிப்பதில் சிக்கல் உள்ளது. அது மட்டுமின்றி லாரியில் விநியோகிக்கப்படும் குடிநீர் சமையலுக்கே பற்றாக்குறையாக உள்ளது. மற்றபடி குளிக்கவும், துணிகள் துவைக்கவும் முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 
சில பகுதிகளில் வீடுகளில் தனியார் லாரி மூலம் குடிநீரை லாரி கொள்ளளவுக்கேற்ப ரூ. 750 
முதல் ரூ.1000 வரை விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக வாடகை வீடுகளில் வசிக்கும் பெரும்பாலானோர் வாடகைக்கு அடுத்தபடியாக தண்ணீருக்கும் பணம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் செலவுகளை சமாளிக்க முடியாமல் நடுத்தர மக்கள் தடுமாறுகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இவ்விஷயத்தில் தலையிட்டு போர்க்கால அடிப்படையில் செங்கல்பட்டு நகராட்சியில் குடிநீர் விநியோகப் பிரச்னையைத் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கூறுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.