சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியைத் தூர்வாரும் பணியை கொடியசைத்துத் தொடக்கி வைத்த ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியது:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஏரிகளுள் ஒன்று செம்பரம்பாக்கம் ஏரியாகும். இதனைத் தூர்வாரி ஏரியின் கொள்ளளவை உயர்த்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த ஏரியைத் தூர்வார தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பரப்பு 2,316 ஹெக்டேர். இதில் 151.80 லட்சம் கன மீட்டருக்கு ஏரி தூர்வாரப்படவுள்ளது. சுமார் 25.30 லட்சம் லோடு மண், லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படவுள்ளது. ஏரியின் மொத்த நீர்க் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடியாகும். இதில், 536 மில்லியன் கன அடி வரை தூர்ந்து போய் உள்ளது. இதனை மீட்டெடுக்கும் வகையில் ஏரியில் தூர்வாரும் பணியைத் தொடக்கி வைத்துள்ளோம் என்றார். இந்த நிகழ்வில், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பழனிசாமி, பொறியாளர்கள் ரமேஷ், சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.