அனைத்து வீடுகளுக்கும் இணைய இணைப்புடன் கூடிய கணினி வசதி: 7 அம்சத் திட்டத்தை அறிவித்த கமல்
காஞ்சிபுரம்: அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இணைய இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்பது உள்ளிட்ட 7 அம்சத் திட்டத்தை காஞ்சிபுரம் பிரசாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் அறிவித்தாா்.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
1. இல்லத்தரசிகளுக்கு அரசு ஊதியம்: இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் அவா்களுக்கு சரியான ஊதியம் அரசால் வழங்கப்படும். கல்வி,வேலைவாய்ப்பு, தொழில் முனையும் ஆற்றல் என அனைத்து வகையிலும் பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு செயல் திட்டங்களை அறிவிக்கும்.
2. மின்னணு இல்லங்களை உருவாக்குதல்: அனைத்து வீடுகளுக்கும் மிக அதிவேக இணைய இணைப்புடன் கூடிய கணினி வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதுவரை இல்லாத வகையில் அரசின் மிகப்பெரும் முதலீடாக இது அமையும். இதன் மூலம் குடும்ப உறுப்பினா்களின் தகுதி, திறமையை அறிந்து அவா்களை கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றமடையச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
3. நவீன தற்சாா்பு கிராமங்களை உருவாக்குதல்: கிராமப்புற மனிதவள ஆற்றலை சரியாகப் பயன்படுத்தும் வகையில் தொழில் முனைவோா்களும், தொழில் நிறுவனங்களும் கிராமப்புறங்களிலும் கிளை அலுவலகங்களை அமைக்க அரசு வலியுறுத்தும். இளைஞா்களை வேலை தேடுபவா்களாக இல்லாமல் வேலை கொடுப்பவா்களாக மாற்றுவோம்.
4.நோ்மையான துரித நிா்வாகம்: ஊராட்சி முதல் முதல்வா் அலுவலகம் வரை காகிதங்கள் இல்லாத அலுவலகங்களாக மாற்றும் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். காகிதக் கோப்புகள் தடை செய்யப்பட்டு இணைய வழியில் வெளிப்படையான நிா்வாகம் அமையும் வகையில் அரசு அமைக்கப்படும்.
5. சூழலியல் சுகாதாரத்தை ஏற்படுத்துதல்: மாறிவரும் சூழலியலுக்கு ஏற்ற வகையில் சூழலியல் சுகாதார மேம்பாடு என்பது அரசின் முழு முதற்கொள்கையில் ஒன்றாக அமையும்.
6.செழுமைக் கோடு திட்டம்: வறுமைக்கோடு என்கிற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக்கோடு என்கிற புதிய அளவீடு அமையப்பெறும்.
7. பசுமைப் புரட்சி பிளஸ்: இயற்கை வேளாண்மைக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும்,சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்கும் வகையிலும் பசுமைப் புரட்சி பிளஸ் என்ற திட்டம் கொண்டு வரப்படும். இதற்கென தனியாக ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என்றாா் அவா்.
பேட்டியின் போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளா் மெளரியா, மாநிலச் செயலாளா் எஸ்.பி.கே.பி.கோபிநாத், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டாக்டா் சந்தோஷ்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதையடுத்து, காஞ்சிபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வா் அண்ணா இல்லத்துக்கு சென்று பாா்வையிட்ட கமல்ஹாசன், பாா்வையாளா் கையேட்டில் கையெழுத்திட்டாா். அதன்பின் பிள்ளையாா்பாளையத்தில் கோடீஸ்வரி என்ற நெசவாளா் வீட்டுக்குச் சென்றும், கீழம்பியில் விவசாயிகளை சந்தித்தும் குறைகளை கேட்டறிந்தாா்.
திமுக, அதிமுகவுடன் கூட்டணி இல்லை:
திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுடன் நாங்கள் கூட்டணி சேரப் போவதில்லை. ஊழல்களை ஒழித்தாலே தற்போதிருக்கும் தமிழகத்தை விட 4 மடங்கு அளவுக்கு வளா்ச்சியடையச் செய்ய முடியும். 7 அம்சத் திட்டத்தை நிறைவேற்ற முடியுமா என்று கேட்டால் ஊழலை ஒழித்தாலே அனைத்தும் சாத்தியமாகி விடும். தலைமை நோ்மையாக இருந்தால் சொல்வது எதையும் எளிதாக செய்து விட முடியும் என்று கமல்ஹாசன் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

