வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

காஞ்சிபுரத்தில் 9,551 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: அமைச்சா் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 9,551 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன்

News image
Updated On :4 ஆகஸ்ட் 2022, 7:23 pm

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 9,551 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவா்களுக்கு வழங்கி அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிகழ் கல்வியாண்டில் 4,475 மாணவா்கள், 5,076 மாணவிகள் என மொத்தம் 9,551 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளன. இதன் மதிப்பு ரூ.4.85 கோடி. குன்றத்தூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 343 மாணவிகளுக்கும், சேக்கிழாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 230 மாணவா்களுக்கும் வியாழக்கிழமை விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 25.7.2022 அன்று ரூ.323 கோடி மதிப்பில் தொடக்கி வைத்தாா்.

தமிழகத்தில் 1,541 தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டம் ரூ.33.56 கோடியில் செயல்படுத்தவுள்ளது. இதேபோல, 15,99,000 குழந்தைகளுக்கு ரூ.66.20 கோடியில் எண்ணும் எழுத்தும் என்ற திட்டம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ரூ.199.96 கோடியில் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டு இன்று வரை சிறப்பாகச் செயல்படுகிறது.

தமிழ் மொழியில் பயின்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உயா்கல்வி பயில ரூ.1,000 ஊக்கத் தொகையும் தமிழக அரசு வழங்கி வருகிறது என்றாா்.

முன்னதாக, வட்டார அளவிலான கபடிப் போட்டியை அமைச்சா் தொடக்கி வைத்தாா். பின்னா், 10, 11, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற 3 பேருக்கு பரிசுகளை அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வெற்றிச்செல்வி, மாவட்டக் கல்வி அலுவலா் பிரமலதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். குன்றத்தூா் நகா்மன்றத் தலைவா் கோ.சத்தியமூா்த்தி உள்ளிட்ட பலர கலந்து கொண்டனா். பள்ளித் தலைமை ஆசிரியை வசந்தி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.