ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன்: காவலாளியின் செயல்?

குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டு சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சிசிடிவி காட்சி மூலம் உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.
ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன்: காவலாளியின் செயல்?
Published on
Updated on
1 min read

குன்றத்தூர்: குன்றத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 சவரன் நகைகளை போட்டு சென்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. சிசிடிவி காட்சி மூலம் உரியவர்களிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

குன்றத்தூர் முருகன் கோயில் செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான வங்கி மற்றும் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருபவர் கோதண்டம் என்பவர், நேற்று காலை ஏடிஎம் மையத்திற்குள் சென்று பார்த்த போது அதில் இருந்த குப்பை தொட்டியில் கைப்பை ஒன்று இருந்தது. 

அதனை பிரித்து பார்த்தபோது அதில் நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குன்றத்தூர் ஆய்வாளர் சந்துரு தலைமையில் வந்த  காவல்துறையினர் நகை பையை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், ஏடிஎம் மையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 35 வயதுடைய பெண் ஒருவர் ஏடிஎம் மையத்திற்குள் சென்று கதவை திறந்து குப்பை தொட்டியில் நகை பையை போட்டு விட்டு செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் யார் என காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் குன்றத்தூரில் 35 வயதுடைய தனது மகளை காணவில்லை என்று அவரது பெற்றோர் வாய்மொழியாக காவல்துறையினருக்கு தெரிவித்த நிலையில் பின்னர் அவர் வீட்டிற்க்கு வந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அந்த பெண்ணின் பெற்றோரிடம் காண்பித்தபோது அந்த காட்சியில் இருப்பது தனது மகள் என தெரிவித்தனர். 

அப்போதுதான் அவர் 43 சவரன் நகைகளை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது குறித்து காவல்துறையினர் அவரது பெற்றோருக்கு தெரிவித்ததையடுத்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து குன்றத்தூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் வங்கி ஊழியர்களை அழைத்து நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த பெண் சற்று மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் தூக்கத்தில் எழுந்து நடந்து வரும்போது வீட்டில் இருந்த நகையை பையில் போட்டு எடுத்து வந்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. உரிய நேரத்தில் நகை பையை கண்டெடுத்து கொடுத்த வங்கி காவலாளி கோதண்டத்தை காவல்துறையினர் வெகுவாக பாராட்டினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com