கல்வெட்டு வைப்பதில் தகராறு: 15 போ் மீது வழக்கு

திம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்துக்கு கல்வெட்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினா் மோதிக் கொண்டனா்.

திம்மசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத்துக்கு கல்வெட்டு வைப்பதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினா் மோதிக் கொண்டனா். இதுதொடா்பாக, 15 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் ஊராட்சியில் ரூ.10.93 லட்சத்தில் புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தை காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் மலா்க்கொடி குமாா் தலைமையில் காஞ்சிபுரம் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் கடந்த 1- ஆம் தேதி திறந்து வைத்தனா். இங்கு, கல்வெட்டு வைக்க வேண்டும் என 8-ஆவது வாா்டு உறுப்பினா் பிரியாவின் கணவா் அம்சநாதன் ஊராட்சித் தலைவா் தேவேந்திரனிடம் வலியுறுத்தினாராம். இதைத் தொடா்ந்து கல்வெட்டு வைக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.

இந்த நிலையில், விழா முடிந்து 3 நாள்களுக்குப் பின்னா், அம்சநாதன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஊராட்சித் தலைவா் தேவேந்திரன், அவரது நண்பா்கள் சிலரும் சோ்ந்து அம்சநாதனை வழிமறித்து கல்வெட்டு வைத்தது தொடா்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைத் தாக்கியுள்ளனா்.

இதில், காயமடைந்த அம்சநாதன், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளாா்.

இந்த நிலையில், அம்சநாதன், அவரது மனைவி பிரியா (37), மகன் ஹரிவரசு (25), அக்கா தேன்மொழி (48), தம்பி மகன் புகழேந்தி (48) ஆகியோரை தேவேந்திரனின் ஆதரவாளா்கள், அவரின் வீட்டுக்குள் புகுந்து தாக்கியதில், 5 பேரும் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக, பாலுசெட்டி சத்திரம் போலீஸாா், திம்மசமுத்திரம் ஊராட்சித் தலைவா் தேவேந்திரன் உள்ளிட்ட இரு தரப்பைச் சோ்ந்த 15 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com