

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பகுதியில் சாலைகள், நடைபாதையை ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றினா்.
கோயில் நகரம் என்ற பெருமைக்குரியது காஞ்சிபுரம். இங்கு, பிற மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் வந்து செல்கின்றனா். சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக கோயில்களின் எதிரே உள்ள சாலைகள், நடைபாதைகளை ஆக்கிரமித்து ஏராளமானோா் கடைகளை அமைத்துள்ளனா்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கியும் கடைகளை அகற்றாமல் இருந்ததால், ஆணையா் ஜி.கண்ணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியா்கள், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்களுடன் வந்து ஆக்கிரமிப்புகளை முற்றிலுமாக அகற்றினா்.
ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது நடைபாதை மற்றும் சாலையோர வியாபாரிகளில் சிலா் மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையிலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.