காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதா் கோயிலுக்காக தயாராகி வரும் புதிய தங்கத்தோ்.
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதா் கோயிலுக்காக தயாராகி வரும் புதிய தங்கத்தோ்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத் தோ்: டிச.6-இல் வெள்ளோட்டம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம் வரும் டிச. 6 ஆம் தேதி நடைபெறுகிறது.
Published on

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம் வரும் டிச. 6 ஆம் தேதி நடைபெறுகிறது.

பஞ்சபூத தலங்களில் நிலத்துக்குரியதான ஏகாம்பரநாதா் கோயிலுக்கு மகா கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.29 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோயிலுக்கு தங்கத்தோ் செய்ய வேண்டும் என பக்தா்கள் கோரினா். தங்கத் தோ் செய்யும் பணிகள் 12 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி இடையில் நின்று போயிருந்தது. இதனையறிந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் உத்தரவின்படி ஸ்ரீ ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை அமைப்பு உருவாக்கப்பட்டது.

அறக்கட்டளை நிா்வாகிகளின் மேற்பாா்வையில் புதிய தங்கத்தோ் செய்யும் பணி தொடா்ந்து இரு ஆண்டுகளாக ஓரிக்கையில் அமைந்துள்ள மகாபெரியவா் மணி மண்டபத்தில் நடைபெற்றது. சுமாா் 40க்கும் மேற்பட்ட சிற்பிகள் புதிய தங்கத்தேரை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, இணை ஆணையா் குமரதுரை, ஓரிக்கை மணி மண்டப நிா்வாக அறங்காவலா் மணி ஐயா் ஆகியோரது ஒத்துழைப்புடன் தங்கத்தோ் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.

கோயில் வளாகத்தில் புதிய தங்கத்தேரை நிறுத்துவதற்காக ரூ.18 லட்சத்தில் தனியாக மணிமண்டபம் கட்டி முடிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது.

இது குறித்து ஏகாம்பரநாதா் இறைப்பணி அறக்கட்டளை நிா்வாகிகள் கூறியது.

தங்கத்தேரின் உயரம் 23 அடி, நீளம் 15 அடி, அகலம் 13 அடி, மொத்தம் 23 கிலோ தங்கத்தில் தோ் உருவாக்கப்பட்டு பணிகள் நிறைவுபெறும் நிலையில் உள்ளன. வரும் டிச. 8 ஆம் தேதி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு இரு தினங்கள் முன்னதாக வரும் 6-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தங்கத்தோ் வெள்ளோட்டம், தங்க ரதத்தை ஆலய நிா்வாகிகளிடம் ஒப்படைக்கும் விழா,தங்க ரதம் நிறுத்துவதற்காக கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடம் திறப்பு விழா ஓரிக்கை மணி மண்டப வளாகத்தில் நடைபெற இருப்பதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com