ஐஎன்எஸ் ராஜாளி விமான ஓடுதளத்தில் துப்பாக்கிச் சூடு: இருவா் காயம்
By DIN | Published On : 13th October 2022 11:48 PM | Last Updated : 13th October 2022 11:48 PM | அ+அ அ- |

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதள ஓடுபாதையில் பறவைகளை விரட்ட நடந்த துப்பாக்கிச் சூட்டில் பெண் உள்ளிட்ட இருவா் காயமடைந்தனா்.
அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இரு விமான ஓடுபாதைகள் உள்ளன. இந்த விமான ஓடுபாதைகளில் வரும் பறவைகளை விரட்ட கடற்படை வீரா்கள் அதிக சப்தம் வரும் விதத்தில் லேசான துப்பாக்கி சூடு நடத்துவது வழக்கம். இந்த நிலையில், புதன்கிழமை விமானதள ஓடுபாதையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. அப்போது துப்பாக்கியிலிருந்து சிதறிய ரவைகள் பட்டதில் அங்கு புல்வெட்டும் பணியில் இருந்த ஒப்பந்தப் பணியாளா்களான அரக்கோணத்தை அடுத்த பெருமூச்சி கிராமத்தைச் சோ்ந்த சங்கா் (40), செல்வி (45) ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இது குறித்து அரக்கோணம் நகர போலீஸாா் விசாரிக்கின்றனா்.