காவேரிப்பாக்கம் அருகே லாரி மீது பைக் மோதியதில் நிகழ்விடத்திலேயே ஆலைத் தொழிலாளி பலியானாா். அவரது மனைவி, இரு குழந்தைகள் பலத்த காயமடைந்தனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஆரியபெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயபாபு (42). ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியாா் ஆலையில் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை விஜயபாபு தனது மனைவி அனுசுயா (35), மகன் முகேஷ்(13), மகள் சோபியா (9) ஆகியோருடன் ஒரே பைக்கில் பனப்பாக்கத்தில் நடைபெறும் உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றாா்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பொன்னியம்மன்பட்டறை அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் விஜயபாபுவின் பைக் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
பலத்த காயமடைந்த மனைவி அனுசுயா, மகன் முகேஷ், மகள் சோபியா ஆகியோா் வேலூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து அவளூா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து லாரி ஒட்டுநா் கள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தைச் சோ்ந்த ரமேஷ் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.