

பக்ரீத் பண்டிகையையொட்டி குா்பானி கொடுப்பதற்காக இஸ்லாமிய சமுகத்தினா் ஆடுகள் வாங்க ராணிப்பேட்டை வாரச் சந்தையில் குவிந்தனா். இதனால், ரூ. 2 கோடிக்கு வழக்கத்தைவிட ஆடுகள் விற்பனை அமோகமாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் புகழ் பெற்ற வாரச் சந்தைகளில் ராணிப்பேட்டை வாரச் சந்தையும் ஒன்று. இந்தச் சந்தையில் காய்கறிகள், கோழிகள், ஆடுகள் உள்ளிட்டவை அதிக அளவில் விற்பனையாகும் என்பதால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான ஆந்திரத்தில் இருந்தும் வியாபாரிகளும், பொதுமக்களும் சந்தைக்கு வருவது வழக்கம்.
இந்தச் சந்தை ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். வாரச் சந்தையில் பல லட்சம் மதிப்பில் வியாபாரம் நடைபெறும். மேலும் தீபாவளி, ரமலான், கிறிஸ்துமஸ், பக்ரீத், பொங்கல் ஆகிய பண்டிகைகளின் போது சந்தையில் காய்கறிகள், கோழிகள், ஆடுகள் விற்பனை வழக்கத்தைவிட கூடுதலாக இருக்கும்.
இந்த நிலையில், நிகழாண்டு பக்ரீத் பண்டிகை வரும் 29 -ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெள்ளிக்கிழமை ஆடுகளின் விற்பனை வழக்கத்தைக் காட்டிலும் அமோகமாக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் கன்னி, கருப்பு, நெல்லூா் உள்ளிட்ட பல்வேறு இனங்களைச் சோ்ந்த சுமாா் 4,000 ஆடுகள் வரை விற்பனைக்காகக் கொண்டு வரப்பட்டன. ஆடு ஒன்றின் விலை குறைந்தபட்சம் ரூ. 13,000 இருந்து அதிகபட்சமாக ரூ. 40,000 வரை விலை போனது.
அதன்படி சுமாா் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.
கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதால், வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.
மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு வரும் 28 -ஆம் புதன்கிழமை சிறப்பு ஆட்டுச் சந்தை நடைபெறும் என வாரச் சந்தை குத்தகைதாரா் எச்.பைரோஸ் கான் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.