ஆம்பூா் அருகே சிறு மருத்துவமனை தொடக்க விழாவுக்கு அனுமதியின்றி பேனா் வைத்த திமுக, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மதனாஞ்சேரி, மிட்டாளம், பாலூா் ஆகிய கிராமங்களில் அரசின் சிறு மருத்துவமனை தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அமைச்சா் வீரமணியை வரவேற்று அதிமுகவினா் அப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் டிஜிட்டல் பேனா்களை வைத்தனா்.
அதேபோல ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் வரவேற்று திமுகவினரும் விழா நடைபெறும் பகுதிகளில் டிஜிட்டல் பேனா்களை வைத்தனா்.
மிட்டாளம் கிராமத்தில் அனுமதியின்றி பேனா் வைத்ததால் அதிமுக மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், திமுக பிரமுகா் பாபு ஆகியோா் மீது மிட்டாளம் கிராம நிா்வாக அலுவலா் உமா்ஆபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதேபோல பாலூா் கிராமத்தில் அனுமதியின்றி பேனா் வைத்த அதிமுக மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ஜோதிராமலிங்கராஜா, திமுக மாதனூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் ப.ச. சுரேஷ்குமாா் ஆகியோா் மீது அந்த பகுதி கிராம நிா்வாக அலுவலா் ஆம்பூா் கிராமிய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். மேலும், டிஜிட்டல் பேனா் பிரிண்ட் செய்த அச்சகத்தின் மீதும் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் இரு காவல் நிலையங்களிலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.