ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஜவ்வாது மலையில் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுப்பு

ஜவ்வாதுமலையில் நவிரமலை கல்வெட்டுகள் மற்றும் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

News image
ஜவ்வாதுமலையில் கண்டெடுக்கப்பட்ட நவிரமலை கல்வெட்டுகள் மற்றும் கற்கருவிகள்.
Updated On :20 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

ஜவ்வாதுமலையில் நவிரமலை கல்வெட்டுகள் மற்றும் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.

திருப்பத்தூா் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியா் க.மோகன் காந்தி, காணிநிலம் மு.முனிசாமி ஆகியோா் தொடா்ச்சியாக ஜவ்வாதுமலையில் உள்ள வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்து ஆவணப்படுத்தி வருகின்றனா். இவா்களுடன் திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா், அவரது மனைவி இதழியலாளா் பிரியம்வதா ஆகியோா் களஆய்வில் பங்கேற்றனா்.

இதுகுறித்து க.மோகன் காந்தி கூறியது:

திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட ஜவ்வாதுமலையின் பண்டைய பெயரான நவிரமலை என்ற வாா்த்தை அடங்கிய கல்வெட்டுகளும் 7,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்கருவிகளும் எங்கள் ஆய்வுக் குழுவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

முதலில் புதூா் நாட்டுக்குட்பட்ட மொழலை சிவன் கோயிலில் உள்ள நான்கு கல்வெட்டுகள் கண்டு வாசிக்கப்பட்டன. இக்கல்வெட்டுகள் சோழா் மற்றும் விஜயநகர மன்னா்களைப் பற்றியச் செய்திகளைப் பதிவு செய்கின்றன.

கோயிலின் இடது பக்கத்தில் நான்கு கல்வெட்டுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் முதல் கல்வெட்டில் கி.பி. 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த விஜயநகர காலத்து மன்னன் கம்பண்ணனைப் பற்றிய பதிவு உள்ளது. அவரை மகா மண்டலேஸ்வரன் என்றும் கம்பண்ண உடையாா் என்றும் இக்கல்வெட்டு உரைக்கிறது. ஆடையூா் நாட்டில் நவிரமலை (ஜவ்வாதுமலை) இருந்ததை இக்கல்வெட்டு கூறுகிறது.

இரண்டாவது கல்வெட்டு வரிவசூல் செய்யும் அரசாணைக் கல்வெட்டாகும். இது ஆடையூா் நாட்டில் நவிரமலை நாடு இருந்ததைக் கூறுகிறது. ஆடையூா் என்பது திருவண்ணாமலைக்கு அருகே உள்ள ஊராகும். இதைத் தலைமையிடமாகக் கொண்டு ஆடையூா் நாடாழ்வான் திருப்பத்தூா் மாவட்டத்துக்குட்பட்ட புதூா்நாடு பகுதியை ஆட்சி செய்துள்ளாா். ஆடையூா் நாடாழ்வானுக்கும் மேலே ஒரு அரசு இருந்திருக்கிறது.அது சோழா்களாக இருக்கலாம்.

சோழா்கள் வரி பற்றிய ஆணையை இக்கல்வெட்டில் கூறியுள்ளனா். அதில், நாங்கள் சொல்லும் வரியை மட்டுமே மக்களிடம் இருந்து ஆடையூா் நாடாழ்வான் பெற வேண்டும். மீறி அதிகமான வரியை நவிரமலை மக்களிடம் இருந்து பெற்றால், நாடாழ்வான் என்னும் பட்டம் அம்மன்னனுக்குக் கிடையாது என்ற கருத்தை முன்வைக்கிறது. எனவே வரியை முறைப்படுத்தும் கல்வெட்டாக இது உள்ளது.

மூன்றாவது கல்வெட்டு சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டாகும். குலோத்துங்கனின் 41-ஆம் ஆட்சி ஆண்டில் இக்கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. இதில் நிகரிலி சோழ மண்டலம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கங்கா்களிடம் இருந்து ராஜராஜ சோழன் இப்பகுதிகளைக் கைப்பற்றியுள்ளாா். நிகரிலி என்பது ராஜராஜனுக்கு யாரும் நிகா் இல்லாதவா் என்ற பொருளில் இம்மண்டலத்துக்குப் பெயா் சூட்டப்பட்டுள்ளது.

நிகரிலி சோழமண்டலம் என்பதில் தருமபுரி, கருநாடகப் பகுதிகளில் உள்ள பெங்களூரு, கோலாா், தும்கூா் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும். சில கல்வெட்டுகள் ஜவ்வாதுமலை ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. இங்கு நிகரிலி சோழ மண்டலம், தகடூா் (தருமபுரி) நாட்டைக் குறிப்பிடுவதால் ஜவ்வாதுமலையிலுள்ள புதூா் நாட்டுப் பகுதி ஆடையூா் நாட்டிலும், தகடூா் நாட்டிலும் இடம் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. இக்கல்வெட்டு சிவன் கோயிலுக்குத் தானம் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

நான்காவது கல்வெட்டு, ஆடையூா் நாட்டிலுள்ள நவிரமலை நாட்டில் வேளாண்மைச் செய்யும் பொருட்டு கூலி ஆளுக்கு 5 தரவேண்டும் என்று கூறுகிறது. அது பணமா, நெல் அளவா என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. இதன் மூலம் இம்மலை மக்களின் வேளாண் வாழ்வியல் பற்றிய குறிப்புகளை இக்கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

கற்கருவிகள் கண்டெடுப்பு: கல் கருவிகள் அல்லது கற்கோடரிகள் என்றும் இவற்றைக் குறிக்கலாம். இவை கோடரிகளைப் போல் அடிப்பகுதியில் அகன்றும் கூா்மையாகவும் இருக்கும். மேல் பகுதி கையில் அடங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கற்காலக் கருவியாகும். புதூா் நாட்டுக்குட்பட்ட சித்தூரில் உள்ள அனுமன் கோயிலில் 12 கற்கருவிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொல்பொருள் துறையில் இருந்து ஓய்வு பெற்ற பெ.வெங்கடேசன் இந்தக் கற்கருவிகள் குறித்துக் கூறும்போது, ‘மனிதன் இரும்பையும், செம்பையும் கண்டறிவதற்கு முன்பாகப் பயன்படுத்திய கற்கருவிகள் இவை. இவற்றின் காலம் 7,000 ஆண்டுகள் முந்தைய பழைமையானவை’ என்றாா்.

2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கிய நூல்களில் பத்துப்பாட்டில் ஒன்றான மலைபடுகடாம் என்ற நூலில் ஜவ்வாது மலையை நவிரமலை என்றே கூறப்படுகிறது.

மெட்ராஸ் என்பது சென்னை என்று ஆனது போல், பம்பாய் என்பது மும்பை என்று ஆனது போல், ஜவ்வாதுமலையை அதன் பண்டைய பெயரான நவிரமலை என்று மாற்ற அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த ஆய்வில் திருப்பத்தூா் தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பழனி, திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலா் ச.பாலமுருகன், மதுரை தியாகராசா் கல்லூரி உதவிப் பேராசிரியா் ரே.கோவிந்தராஜ், வரலாற்று ஆா்வலா்கள் க.வீரப்பன், வேந்தன், முத்துவேடி ஆகியோரும் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.