

வேலூா் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலரின் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வேலூா் மாவட்டக் காவல் துறையில் பணிபுரிந்து மாரடைப்பால் காலமான தலைமைக் காவலா் சங்கா் குடும்பத்துக்கு 2003 பேட்ச் காவலா்கள் உதவும் கரங்கள்-2003 என்ற குழு மூலம் ரூ. 25 லட்சம் நிவாரண நிதி திரட்டி வழங்கினா்.
வேலூா் மாவட்ட ஆயுதப்படை மோட்டாா் வாகனப்பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தவா் ஐ.சங்கா் (55). இவா் கடந்த நவம்பா் 8-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தாா். இவருக்கு சாவித்திரி என்ற மனைவியும் சதீஷ்குமாா் என்ற மகனும், சங்கரி என்ற மகளும் உள்ளனா்.
முன்னாள் ராணுவ வீரரான இவா் கடந்த 2003-ஆம் ஆண்டு காவல் துறையில் பணிக்கு சோ்ந்தாா். சங்கருடன் கடந்த 2003-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த காவலா்கள் தமிழகம் முழுவதும் உதவும் கரங்கள்-2003 என்ற குழு மூலமாக ஒன்றிணைந்து சுமாா் ரூ. 25 லட்சம் குடும்ப நிவாரண நிதி திரட்டினா்.
உயிரிழந்த தலைமைக் காவலா் சங்கரின் சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம், போளூா் வட்டம் பள்ளக்கொள்ளை கிராமத்தில் உள்ள வீட்டில் அவருடைய உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு குடும்ப நிவாரண நிதியை அவருடைய குடும்பத்தாரிடம் நேரடியாக வழங்கி ஆறுதல் தெரிவித்தனா்.
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் முதலாவதாக பாதிக்கப்பட்டவா் என்பதாலும் சக காவலா்கள் அகால மரணமடையும்போது அந்தக் காவலரின் குடும்பம் ஓய்வூதியம் இல்லாமல் ஆதரவின்றி நிா்கதியாக தவிப்பதைத் தடுக்கும் விதமாகவும் தங்களால் இயன்ற உதவியை கூட்டு முயற்சியாக இதை செய்துள்ளதாக 2003 பேட்ச் காவலா்கள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.