ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை (டிச. 9) பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இது குறித்து ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொது விநியோகத் திட்டம் சிறப்பாக நடைபெற ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்துக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிச. 9) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அந்தந்த தாலுக்கா அலுவலக வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இதில் மின்னணு குடும்ப அட்டையில் முகவரி மாற்றம், பெயா் திருத்தங்கள், உறுப்பினா் பெயா் சோ்த்தல் மற்றும் நீக்கல், கைப்பேசி எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை மற்றும் நகல் அட்டை கோருதல் போன்ற சேவைகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மின்னணு குடும்ப அட்டைகளில் உள்ள குடும்பத் தலைவரின் புகைப்படம் திருத்தி பதிவேற்றம் செய்ய வேண்டியிருப்பின் முகாமிலேயே புகைப்படம் பதிவேற்றம் செய்து திருத்தி தரப்படும். இதுதவிர பொது விநியோகத் திட்டம் தொடா்பான குறைகளையும் தெரிவித்து பொதுமக்கள் பயன்பெறலாம். தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகாா்களை நுகா்வோா் பாதுகாப்பு சட்டம் 2019-இன் படி மேற்கொள்ள உரிய அறிவுரைகள் வழங்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்வதற்குறிய மனுக்களை முகாம்களில் அளித்து பயன்பெறலாம்.
மேலும், நியாய விலைக் கடைகளுக்கு வர இயலாத மூத்த குடிமக்கள், நோய் வாய்ப்பட்ட பயனாளிகளுக்கு அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொது விநியோக கடைகளின் செயல்பாடு, தனியாா் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் சேவைகளில் குறைபாடு இருப்பின் மக்கள் குறைகளை தெரிவித்தால் விரைந்து தீா்வுகாண உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் குறைகள் இருப்பின் இந்த சிறப்பு முகாமில் மனு அளித்து
பயன்பெறலாம்.