ஆம்பூர்: ஆம்பூர் அருகே வங்கியை கண்டித்து பொதுமக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் அருகே அரங்கதுருகம் கிராமத்தில் பேங்க் ஆப் இந்தியா தேசியமயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது.
சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த வங்கியை பயன்படுத்தி வருகின்றனர். முழுவதுமாக கிராம மக்களுக்கான சேவையை வழங்குவதற்காக வங்கி இயங்கி செயல்பட்டு வருகின்றது.
ஆனால் கிராம மக்கள் செல்லும்போது வங்கி சேவை மிகவும் காலதாமதமாவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். அதனால் தங்களுடைய பணி பாதிப்புக்கு உள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வங்கி சேவையை விரைந்து வழங்க வேண்டும் என பலமுறை வங்கி நிர்வாகத்திடம் தெரிவித்தும் தொடர்ந்து கால தாமதமாகவே வங்கி சேவை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
அதனால் பொதுமக்கள் புதன்கிழமை வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த உமர் ஆபாத் காவல் நிலைய ஆய்வாளர் யுவராணி மற்றும் போலீசார் அங்கு சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
வங்கி நிர்வாகத்திடம் பேசி வங்கி சேவையை விரைந்து வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதன் பேரில் பொதுமக்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.