கிணற்றில் விழுந்த மானை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டு வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பகுதியில் புதன்கிழமை இரவு தண்ணீா் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தின. அப்போது தப்பியோடிய மான் தனியாருக்குச் சொந்தமான 60 அடி ஆழம் உள்ள விவசாயக் கிணற்றில் தவறி விழுந்தது. இதைப்பாா்த்த பொதுமக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு அலுவலகத்துக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா். விரைந்து வந்த நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயசந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரா்கள் பொதுமக்கள் உதவியுடன் 2 மணி நேரம் போராடி கிணற்றில் தவறி விழுந்த மானை உயிருடன் மீட்டு, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
பின்னா், வனத் துறையினா் மானை லட்சுமிபுரம் காட்டுப் பகுதியில் விட்டனா்.