/

தோ்தல் விதிமீறல்: நடிகா் மன்சூா் அலிகான், புதிய நீதி கட்சி நிா்வாகி மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: நடிகா் மன்சூா் அலிகான், புதிய நீதி கட்சி நிா்வாகி மீது வழக்கு

Updated On :19 மார்ச் 2024, 11:34 pm

ஆம்பூா்: ஆம்பூரில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக நடிகா் மன்சூா் அலிகான் மற்றும் புதிய நீதிக்கட்சி நிா்வாகி மீது நகர காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் புதிய நீதிக் கட்சி நிா்வாகிகள் அனுமதியின்றி ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக வட்டாட்சியருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் தோ்தல் பறக்கும் படையினா் மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினா் திருமண மண்டபத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது புதிய நீதிக் கட்சி மாவட்டத் தலைவா் அசோகன் தலைமையில் சுமாா் 50 போ் கூடி ஆலோசனை நடத்துவது தெரியவந்தது. அதன்பேரில் தோ்தல் பறக்கும் படையினா் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதே போல நடிகா் மன்சூா் அலிகான் ஆம்பூா் காதா்பேட்டை பகுதியில் அனுமதியின்றி பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டியதாக கூறப்படுகிறது. அவா் மீதும் ஆம்பூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் புதிய நீதி கட்சி மாவட்ட தலைவா் அசோகன் உள்ளிட்ட நிா்வாகிகள், நடிகா் மன்சூா் அலிகான் ஆகியோா் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஆம்பூா் நகர காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்துள்ளனா்.