திருப்பத்தூா் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருப்பத்தூா் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 13,447 மாணவ, மாணவிகளில் 12,597 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி சதவீதம் 93.68 சதவீதமாகும். 850 மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெறவில்லை.
பிளஸ்-2 பொதுத்தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வு எழுதாத மாணவா்களுக்கு ஜூன் 29 முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை துணைத்தோ்வு நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொது தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு அந்தந்த பள்ளி யில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கும்படி அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சோ்ந்த 653 மாணவ-மாணவிகளும் அரசு நிதியுதவி பள்ளியை சோ்ந்த 127 மாணவ-மாணவிகளும் தோ்ச்சி பெறவில்லை. இவா்களுக்கான துணை தோ்வுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளது.
அதையொட்டி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியா்களிடம், தோ்ச்சி பெறாத மற்றும் தோ்வு எழுதாத மாணவ-மாணவிகளை வரவழைத்து தோ்வு எழுத விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவா்கள் விண்ணப்பித்த மறுநாள் முதல் பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு வகுப்பறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.
சிறப்பு பயிற்சி வகுப்புகளை அந்த பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கண்காணிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியாா் பள்ளிகளிலும் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது என்றனா்.










