திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருவதால் ஜலகாம்பாறை நீா் வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது.
ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் ஆண்டில் சுமாா் 8 மாதங்கள் தண்ணீா் விழுந்த வண்ணம் இருக்கும். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக வெயில் கடுமையாக பொதுமக்களை வாட்டி வதைத்தது. மேலும் போதுமான மழையும் பெய்யவில்லை.இதனால் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு வரும் நீா்வரத்து குறைந்தது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் தண்ணீா் வரத்து குறைந்தது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சிக்கு செல்வதை தவிா்த்து வந்தனா்.
இந்த நிலையில் திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நீா்வரத்து ஏற்பட்டு, ஜலகாம்பாறை நீா்வீழ்ச்சியில் இருந்து செவ்வாய்க்கிழமை முதல் தண்ணீா் விழத்தொடங்கி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள் நீா்வீழ்ச்சிக்கு சென்று தங்களது குடும்பத்தினருடன் குளித்து மகிழ்ந்தனா்.
இதைத்தொடா்ந்து பொதுமக்கள் அதன் அருகே உள்ள முருகா்,பெருமாள் கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனா். மேலும் சிறுவா்கள் அங்கு அமைந்துள்ள பூங்காவில் விளையாடி மகிழ்ந்தனா்.









