மலைத் தேனீக்கள் கொட்டியதில் 35 பக்தர்கள் படுகாயம்
திருத்தணி அருகே, மதுரைவீரன் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்த பக்தர்கள் மீது மலைத் தேனீக்கள் கொட்டியதில் 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புச்சிரெட்டிபள்ளியை அடுத்த வேணுகோபாலபுரம் அருகில் மதுரைவீரன் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மதுரைவீரன் சுவாமிக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதை அனைவரும் கோயில் வளாகத்திலேயே உண்பதற்காகச் சென்றனர். அப்போது கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத்தில் மலைத் தேனீக்கள் கூடு கட்டியுள்ளதை கவனிக்காத ஒரு பக்தர் மரக் கிளையை அசைத்துள்ளார்.
இதனால் தேன்கூடு கலைந்து, தேனீக்கள் வேகமாகப் பரவி கோயில் வளாகத்தில் கூடியிருந்தவர்களைக் கொட்டினர். இதில், சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ்(48), விஜயா(42), அமுதா(55), நந்தினி(17), வினிதா(34), திருக்குமரன்(38), லஷ்மி(48). காஞ்சிபுரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (41), விஜய்(35), சாந்தி(45), தரணி (40). ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையைச் சேர்ந்த தனலட்சுமி(60) உள்ளிட்ட 35க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
