கும்மிடிப்பூண்டி அருகே விதிமுறைகளை மீறிச் செயல்படும் மண் குவாரியை மூட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கரை பகுதியில் சவுடு மண் குவாரி கடந்த மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு சவுடு மண் எடுப்பதாக உரிமம் பெற்றுவிட்டு, முறைகேடாக கிராவல் மண் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் இதுவரை 5 முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
மேலும் இந்த குவாரியில் அனுமதி பெறாத இடங்களில் எல்லாம் மண் எடுப்பதாகவும்
கூறப்படுகிறது.
இந்நிலையில், குவாரியின் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு வருவாய்த் துறையினரும், கனிம வளத்துறையினரும், போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குவாரியில் 48 நாள்களில் 5,000 லோடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நாள் ஒன்றுக்கு 300 லாரிகளில் 9,000 முதல் 10,000 லோடு வரை மண் எடுப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீஸாரிடம் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.