திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டுவதற்கு அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ.அரி புதன்கிழமை அடிக்கல் நாட்டினார்.
திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1600-க்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளி வளாகத்தில் கலையரங்கம் இல்லாததால், காலையில் இறைவணக்கம் பாடுதல் மற்றும் பள்ளியில் முக்கிய விழாக்களை நடத்தவும் ஆசிரியர், மாணவியர் சிரமப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் ஆண்டு விழா போன்ற விழாக்களின் போது கலையரங்கம் இல்லாததால் மாணவியர் அவதிப்பட்டனர். இந்நிலையில், பள்ளிக்கு கலையரங்கம் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் எம்.சுரேஷ், தலைமை ஆசிரியை டி. தெமினா கிரோனப் ஆகியோர் அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ.அரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கலையரங்கம் கட்ட ஏற்பாடு செய்தார்.
இதையடுத்து, பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை காலை நடைபெற்றது. இதில், சிறப்பு அழைப்பாளராக அரக்கோணம் மக்களவை உறுப்பினர் கோ.அரி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
அப்போது, இக்கட்டடப் பணிகள் ஆறு மாதத்தில் முடிவடைந்து கலையரங்கம் மாணவியர் பயன்பாட்டுக்கு விடப்படும் என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அரசு, முன்னாள் நகர்மன்றத் தலைவர் சௌந்தர்ராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குமார், கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத் தலைவர் ஜெயசேகர் பாபு, உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயசந்திரன், சேஷாசலம் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








