ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கருத்து சுதந்திரம் உயிர் மூச்சு போன்றது என எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தெரிவித்தார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியப்பாளைம் பஜாரில் பொதுக் கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா பேசியது:
கடந்த 1975-ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு ஒரு சட்டச் சிக்கல் ஏற்பட்டது.இதனால் அவருடைய எம்.பி. பதவி பறிபோனது.
அவர் தேர்தலில் நிற்க முடியாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தனக்கு ஏற்பட்ட நெருக்கடியை நாட்டிற்கு ஏற்பட்டதாகக் காரணம் காட்டி நாட்டில் அவசர நிலையைப் பிரகடனம் செய்தார்.
அவசரநிலை என்றால் எந்த சுதந்திரமும் கிடையாது. உயிர் வாழும் உரிமை உட்பட சுதந்திரமும் கிடையாது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொழிற்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவர்களையும், தலைவர்களையும் சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்தனர்.
இந்தச் சூழலில்தான் எழுத்தாளர்கள், கலைஞர்கள் இந்திய அரசியல் சாசனம் தங்களுக்கு வழங்கியிருக்கும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்க கதை, கவிதை, கலை, இசை, பாடல், ஓவியம், நாடகம் என நடந்த முன் வந்தபோது அவர்களுக்கு அந்த உரிமைகள் மறுக்கப்பட்டன.
எந்த உரிமையும் இல்லாத காலத்தில் மனிதனுக்கு மூச்சு விடுவதற்கு ஒப்பானது கருத்துச் சுதந்திரம் என்றார்.