கும்மிடிப்பூண்டியில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழையால் 1000 ஹெக்டேர் நெற்பயிரும், 500 ஹெக்டேர் கடலை பயிரும் சேதமடைந்துள்ளதாக வேளாண்துறை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் கடந்த மாதம் முதல் விட்டு விட்டு கனமழை பெய்தது. இந்நிலையில் கடந்த ஜன-6, 7 தேதிகளில் மீண்டும் இடைவிடாத மழை பெய்தது. இதனால் சம்பா பருவத்தில் சாகுபடி செய்து அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள், விதைப்பு செய்து 10 நாள்களே ஆன கடலை பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேளாண் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கும்மிடிப்பூண்டி வேளாண்துறை உதவி இயக்குனர் கு.அறிவழகன், துணை வேளாண் அலுவலர் ரமேஷ், உதவி வேளாண் அலுவலர்கள், வருவாய் துறையினரோடு பல்வேறு பகுதிகளில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் அறுவடைக்கு தயாராய் இருந்த 1000 ஹெக்டேர் நெற்பயிர்களும், 10நாள் முன் விதைப்பு செய்த 500 ஏக்கர் கடலை பயிரும் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து இது குறித்த விபரங்களை வேளாண் துறையினர் மாவட்ட நிர்வாகத்திற்கும்,மாவட்ட வேளாண் துறைக்கும் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தங்கள் வேளாண் பயிருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கும்மிடிப்பூண்டி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.