திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், திருவள்ளூர் அருகே கதவு பூட்டை உடைத்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 35 சவரன் நகையை திருடிக் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே திருப்பந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனிவாசன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர் தனது மகன் மணிவண்ணன் வீடு அருகே தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் புதன்கிழமை மணிவண்ணன் தனது மகளை மருத்துவ படிப்பில் சேர்ப்பதற்காக தண்டலம் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரிக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார்.
பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது கிருஷ்ணவேணியின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த ரூ.13 லட்சம் மதிப்பிலான 35 சவரன் தங்க நகை மர்ம நபர்கள் திருடிக் சென்றதும் தெரியவந்தது.
இதுகுறித்து மணிவண்ணன் மப்பேடு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
திருவள்ளூர் போலீஸ் டிஎஸ்பி சந்திரதாசன், மப்பேடு சார்பு ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் காவல்துறையினர் திருப்பனையூர் கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பிறகு தடயங்களை சேகரித்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து நகையை திருடிக் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.