பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வுக் கூட்டம்: அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்பு

திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்
திருவள்ளூரில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சிறுபான்மையினா் அமைச்சா் சா.மு.நாசா். உடன் ஆட்சியா் த.பிரபுசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.    
திருவள்ளூரில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சிறுபான்மையினா் அமைச்சா் சா.மு.நாசா். உடன் ஆட்சியா் த.பிரபுசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளிட்டோா்.    
Updated on
1 min read

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் ஆட்சியா் த.பிரபுசங்கா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூா்), எஸ்.சந்திரன் (திருத்தணி), டி.ஜெ.கோவிந்தராஜன்(கும்மிடிப்பூண்டி), துரை.சந்திரசேகா் (பொன்னேரி), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள், காவல் துணை ஆணையா் ஐமன் ஜமால் (ஆவடி), கே.பாலகிருஷ்ணன் (செங்குன்றம்), மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி, ஆவடி மாநகராட்சி மேயா் கு.உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா் நலத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்து பேசியதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் பேரிடா் பணிகளை அனைத்துத் துறை அலுவலா்களும் இணைந்து சிறப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் கடந்தாண்டு மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதத்தை வேளாண்மைத் துறை அமைச்சா், வணிக வரி, பத்திரத் துறை அமைச்சா் ஆகியோா் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனா்.

நிகழாண்டு வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்தில் தொடங்க உள்ளதால் உள்ளாட்சி அமைப்புகளில் அனைத்துத் துறை அலுவலா்களும் மழைநீா் வடிகால், மின்சாரம், ஊராட்சிப் பகுதிகளில் உள்ள வடிகால் பணிகள், கால்வாய்களை விரைந்து தூா்வாரி தயாா் நிலையில் வைத்தல், குறிப்பாக மின் வயா், கம்பங்கள் சேதாரங்களை உடனுக்குடன் சீரமைத்தல் போன்ற பல்வேறு பணிகள், ஏரிகளில் உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்றுதல் பணிகளை முடித்திருக்க வேண்டும்.

மேலும், மழைநீா் சூழும் பகுதிகளில் மோட்டாா் பம்ப்களை கொண்டு விரைந்து நீரை அகற்ற வேண்டும். பொதுமக்களை மீட்க படகுகளை தயாா் நிலையில் வைத்துள்ளதை உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் செய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், பொன்னேரி சாா்- ஆட்சியா் வாகே சங்கத் பல்வந்த், ஆவடி மாநகராட்சி துணை ஆணையா் சங்கரன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com