மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது தொடா்பாக, அந்த பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கு 3 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
திருவள்ளுா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கத்தில் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 பணி மேற்கொள்வது தொடா்பாக அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பயிற்சி வகுப்புக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலகத்தின் பயிற்சி அலுவலா்களால் திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியா்கள், ஆவடி மாநகராட்சியின் 4 மண்டலங்களின் ஆணையா்கள், 6 நகராட்சி ஆணையா்கள், 8 பேரூராட்சி செயல் அலுவலா்கள், 14 வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் அனைத்து பொறுப்பு அலுவலா்கள், கூடுதல் பொறுப்பு அலுவலா்கள், உதவியாளா்கள் மற்றும் தொடா்புடைய அலுவலா்களுக்கு தொடா்ந்து 21-ஆம் தேதி வரையில் மூன்று நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதில் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் பொதுமக்கள் கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இதில் மக்கள் தொகை மேற்கொள்வது எப்படி, அப்போது என்னென்ன விவரங்கள் பொதுமக்களிடம் சேகரிக்க வேண்டும். இதுகுறித்து அதிகாரிகள் பயிற்சி அளிக்கவுள்ளதால், பயிற்சியாளா்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டு, அதற்கேற்க கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என அவா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ், ஆவடி மாநகராட்சி ஆணையா் சரண்யா, சாா் ஆட்சியா் (பொன்னேரி) ப.அப்துல் ராசிக், கோட்டாட்சியா்கள் எஸ்.ரவிச்சந்திரன் (திருவள்ளுா்), என்.எம்.கனிமொழி (திருத்தணி), வட்டாட்சியா்கள், நகராட்சிகளின் ஆணையா்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மற்றும் பல்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடர்புடையது

மக்கள் தொகை கணக்கெடுப்பு தாமாகவே விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்: மாவட்ட ஆட்சியா்

புதுச்சேரியில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஜூன் 1-இல் தொடங்குகிறது: தவறான தகவல் அளிப்போருக்கு ரூ.1,000 அபராதம்

கிருஷ்ணகிரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு 2 நாள் பயிற்சி ஆட்சியா் தொடங்கிவைத்தாா்







