

திருமலையில் வழங்கப்படும் ஸ்ரீவாணி ஆஃப்லைன் தரிசன டிக்கெட் 3 நாள்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதால் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஏழுமலையான் கோயில் கட்ட தேவஸ்தானம் ஸ்ரீவாணி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளையை உருவாக்கியது.
இந்த அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்குபவா்களுக்கு ஒரு விஐபி பிரேக் தரிசன அனுமதியை தேவஸ்தானம் வழங்கி வருகிறது.
இணையதளம் வழியாகவும், திருமலைக்கு நேரடியாக வந்தும் நன்கொடை வழங்கும் வாய்ப்பை தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
நன்கொடை வழங்கிய பின்னர் பக்தா்கள் ஒரு விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்று ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். நன்கொடை வழங்குபவர்கள் தாங்கள் விரும்பும் நாளில் தரிசன டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த நிலையில், திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் ஸ்ரீவாணி ஆஃப்லைன் தரிசன டிக்கெட்டுகள் வரும் டிச. 27, 28, 29 ஆகிய தேதிகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருமலை ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரிலும், திருப்பதியில் உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்திலும் ஸ்ரீவாணி ஆஃப்லைன் டிக்கெட்டுகள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை மனதில் கொண்டு பக்தா்கள் தங்கள் தரிசனத்தைத் திட்டமிடுமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.