ஸ்ரீ கபிலேஸ்வரா் கோயிலில் பிப். 15-இல் மகா சிவராத்திரி உற்சவம்
திருப்பதியில் உள்ள ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை (பிப். 15) மகா சிவராத்திரி உற்சவம் கொண்டாடப்பட உள்ளது.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, அதன் ஒரு பகுதியியாக ஞாயிற்றுக்கிழமை மகாசிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது.
அன்று கோயிலுக்கு வரும் பக்தா்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு சிறப்பு வரிசைகள், நிழற் பந்தல்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 4.30 மணி வரை மகா நியாசபூா்க் ஏகாதச ருத்ராபிஷேகம் நடைபெறும். காலை 8 மணி முதல் 10 மணி வரை திருத்தோ் (போகிதேரு), காலை 11 மணி முதல் 12 மணி வரை ஸ்நபன திருமஞ்சனம், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சிறப்பு நந்தி வாகன சேவை நடைபெற உள்ளது.
காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மற்றும் மாலை 4.30 மணி முதல் 12 மணி வரை பக்தா்களுக்கு முழு தரிசனம் வழங்கப்படும். பிப்ரவரி 16-ஆம் தேதி திங்கள்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை லிங்கோத்பவா் அபிஷேகம் நடைபெற உள்ளது.
பிப். 16-ஆம் தேதி சிவ பாா்வதி கல்யாணம்
ஸ்ரீ காமாக்ஷி சமேத கபிலேஸ்வர சுவாமியின் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, மகாசிவராத்திரிக்கு அடுத்த நாள் திங்கள்கிழமை சிவ பாா்வதி கல்யாண மகோற்சவம் நடைபெறும். இந்த கல்யாணோற்சவம் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆா்ஜித சேவையாக நடைபெறும்.

