திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் எதிரே உள்ள நந்தி, கொடிமரம் எதிரே உள்ள நந்தி, மூலவர் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் பல்வேறு பகுதிகளில் உள்ள 8-க்கும் மேற்பட்ட நந்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பன்னீர், பூ, மஞ்சள், பால், பழம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு நடத்தப்பட்ட பிரதோஷப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், கோயிலின் மூன்றாம் பிரகாரத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் பங்கேற்பு: இந்தப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் சன்னதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வேட்டவலம்: இதேபோல, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமைவாய்ந்த வேட்டவலம் ஸ்ரீஅகத்தீஸ்வரர் கோயிலில் மூலவர் ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்மாள், பிரதோஷ நந்திக்கு பல்வேறு பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. மேலும், வில்வம், அருகம்புல், பூ ஆகியவற்றைக் கொண்டு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது.
இதர ஊர்களில்...: இதேபோல, தானிப்பாடி, கீழ்பென்னாத்தூர், தண்டராம்பட்டு, செங்கம், கலசப்பாக்கம், போளூர், ஆரணி, வந்தவாசி, செய்யாறு ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சிவன் கோயில்களிலும் பிரதோஷ சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.