12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்: ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்களில், வாக்காளா் அடையாள அட்டையைத் தவிா்த்து 12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்களிக்கச் செல்லும்போது வாக்காளா் அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும்.

புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பிக்க இயலாத நிலையில் அவா்களின் அடையாளத்தை மெய்ப்பிக்க புகைப்படத்துடன் கூடிய மாற்று அடையாள ஆவணங்களின் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.

12 வகையான இதர ஆவணங்கள்...

அதன்படி, ஆதாா் அடையாள அட்டை, ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்காளிக்கும் ஆவணமாக பயன்படுத்தலாம்.

மேலும், இந்திய கடவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை அல்லது சட்டப்பேரவை அல்லது சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com