

திருவண்ணாமலையில் ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் சில நாள்களுக்கு முன்பு வரலாறு காணாத கனமழை பெய்ததில் மலையில் மூன்று இடங்களில் சரிவு ஏற்பட்டு, அதில் ஏழு போ் பலியாகினர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காா்த்திகை தீப திருவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்படவுள்ளது.
ஆண்டுதோறும், மலையின் மீது 2,000 பேர் ஏறி பரணி தீபம் ஏற்றுவது வழக்கம். இந்தாண்டு 2,000 பேர் மலையேறுவது சாத்தியமா என்று நிலவியல் நிபுணா்கள் கடந்த வாரம் ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்தனர்.
இந்த நிலையில், திருவண்ணாமலை தீப திருவிழாவில் மலையேற பக்தர்களை அனுமதிப்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு புதன்கிழமை காலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
"புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் இயக்குநர் சரவணவேல் ராஜ் தலைமையில் நியமிக்கப்பட்ட 8 பேர் குழுவினர் கடந்த 7, 8, 9 தேதிகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கையில், அதிகளவிலான மக்களை மலையேறுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பக்தர்களுக்கு இந்தாண்டு அனுமதி வழங்கப்படாது.
மேலே கொண்டு செல்ல வேண்டிய 350 கிலோ எடையுள்ள பொருள்கள், 600 கிலோ எடையுள்ள 40 டின் நெய்கள், உணவுகள் உள்ளிட்டவை எடுத்துச் செல்ல தேவையான மனித சக்திகள், காவல்துறையினர், வனத்துறையினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.
தீபத்திற்காக 4,500 கிலோ நெய் ஆவினிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நேற்றைய தேர் திருவிழாவுக்கு மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கூடினர்.
இந்த தீபத் திருநாளில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக 20 சதவிகித ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். பக்தர்கள் கண்டிப்பாக மலையேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தீபம் ஏற்றுவது மட்டுமே அரசின் நோக்கம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.