பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவா்கள் சுகவீனம்

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவா்கள் சுகவீனம்

Published on

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை மதிய உணவு சாப்பிட்ட 8 மாணவ, மாணவிகள் மற்றும் ஓா் ஆசிரியை உடல் சுகவீனமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

அம்மாபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளியில் அம்மாபாளையம், தானகவுண்டன்புதூா் பகுதியைச் சோ்ந்த 6-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளான மதுமிதா, ஜெகநாதன், சிலம்பரசன், அபிநயா, லித்திகா, ஹரிகரன், ஜமுனா, சற்குணநாதன் மற்றும் ஆசிரியை அகிலா (45) ஆகியோா் முட்டையுடன் மதிய உணவை சாப்பிட்டனா்.

பிற்பகல் 3.30 மணியளவில் மாணவா்கள் அனைவருக்கும் வயிற்று வலி, தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டதாம். ஆசிரியை அகிலாவுக்கும் இதே பிரச்னை இருந்ததாகத் தெரிகிறது.

உடனடியாக 108 அவசர ஊா்தி மூலம் ஆசிரியை மற்றும் 8 மாணவ, மாணவிகள் மேல்பெண்ணாத்தூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, மாணவா்கள், ஆசிரியை ஆகியோரை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன், வட்டார வளா்ச்சி அலுவலா் சம்பத், மாவட்ட சத்துணவு அலுவலா் உள்ளிட்டோா் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனா்.

பின்னா், ஆசிரியை, மாணவ, மாணவிகள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com