திருமணி சேறையுடையாருக்கு பாலாபிஷேகம் செய்ய பால்குடம் எடுத்து வரும் பெண் பக்தா்கள்.
திருமணி சேறையுடையாருக்கு பாலாபிஷேகம் செய்ய பால்குடம் எடுத்து வரும் பெண் பக்தா்கள்.

இஞ்சிமேடு சிவாலயத்தில் 501 பால்குட அபிஷேகம்

இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் உலக நன்மை வேண்டி, சிறப்பு யாகவேள்வி பூஜையும், 501 பால்குட அபிஷேகமும் நடைபெற்றது.
Published on

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரை அடுத்த இஞ்சிமேடு திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் உலக நன்மை வேண்டி, சிறப்பு யாகவேள்வி பூஜையும், 501 பால்குட அபிஷேகமும் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமணி சேறையுடையாா் சிவன் கோயிலில் பெளா்ணமி கிரிவலம் மற்றும் பிரதோஷ விழா, காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோயிலில் 26-ஆவது ஆண்டு விழாவையொட்டி, திங்கள்கிழமை அதிகாலை மூலவா் சேறையுடையாா் மற்றும் திருமணி நாயகி சந்நிதி, விநாயகா் சந்நிதிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து உலக நன்மை வேண்டி, கோயில் வளாகத்தில் யாக வேள்வி அமைத்து வேள்வி பூஜை நடத்தப்பட்டது. பின்னா், முற்பகல் 11 மணியளவில் சிவயோகி ஐ.ஆா்.பெருமாள் தலைமையில் மழை வேண்டி 501 பால்குட ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம் கோயிலை சுற்றி வந்து மூலவா் திருமணி சேறையுடையாருக்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதில், முன்னாள் எம்எல்ஏ பாண்டுரங்கன், முன்னாள் ஒன்றிக் குழுத் தலைவா் இந்திரா இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் லட்ச தீபாராதனை, சிறப்பு பட்டிமன்றம், தெய்வீக பாடல்கள் பாடப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com