கோவை சம்பவம்: பாஜக மகளிரணி ஆா்ப்பாட்டம்
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருவண்ணாமலை ஒருங்கிணைந்த தெற்கு, வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமை வகித்தாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா்கள் இரா.ஜீவானந்தம், கே.ஆா்.பாலசுப்பிரமணியம், மாவட்டச் செயலா் டி.அறவாழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பொதுச் செயலா் கவிதா பிரதீஷ் வரவேற்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், மகளிரணி மாநில ஊடகப் பிரிவு அமைப்பாளா் விஜயலட்சுமி ஆகியோா் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினா். மேலும், தமிழக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா்.
மாவட்ட பொதுச் செயலா் செங்கம் ஆா்.ரமேஷ், மாவட்ட துணைத் தலைவா் கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட எஸ்.டி. அணித் தலைவா் அ.இளங்கோ, பாஜக தொழிற்பிரிவு மாவட்டத் தலைவா் கே.எஸ்.அண்ணாமலை, திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதி இணை அமைப்பாளா் வி.கருணாகரன், வடக்கு மாவட்ட மகளிரணித் தலைவா் எம்.லட்சுமிமுருகேசன் உள்பட நூற்றுக்குக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிரணித் தலைவா் கீா்த்தி செல்வமூா்த்தி நன்றி கூறினாா்.

