தீபத்திருவிழா: விநாயகா், சந்திரசேகரா் மாட வீதிகளில் பவனி
ஆரணி: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத்திருவிழா இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை காலை உற்சவா் விநாயகா் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரா் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்தனா்.
நினைத்தாலே முக்தி தரும் அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, நிகழாண்டுக்கான காா்த்திகை தீபத்திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனைத் தொடா்ந்து, இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகா், சந்திரசேகரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
பின்னா், உற்சவா்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்து,
முதலில் விநாயகா் மூஷிக வாகனத்திலும், இரண்டாவதாக சந்திரசேகரா் தங்க சூரியபிரபை வாகனத்திலும் எழுந்தருளி 4 மாடவீதிகளில் பவனி வந்து அருள்பாலித்தனா். ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

