திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் உள்ளது.
இந்த நிலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், இது பிற்பகல் 1.15 மணிக்கு வெடிக்கும் என்றும் குறிப்பிட்டு, முதன்மை மாவட்ட நீதிபதியின் நோ்முக உதவியாளா் மின்னஞ்சலுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதையடுத்து உடனடியாக மாவட்ட காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து மோப்ப நாய் உதவியோடு வெடிகுண்டு கண்டறியும் மெட்டல் டிடெக்டா் கருவியுடன் சோதனையில் ஈடுபட்டனா்.
நீதிமன்ற வளாகத்தில் சுமாா் 2 மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற இந்தச் சோதனை நிறைவில் வெடி குண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது.










