நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம்: மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளா்கள் சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன் தெரிவித்தாா்.

News image

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா்களுடன் நடைபெற்ற தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிப்பது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன்.

Updated On :20 மார்ச் 2026, 7:52 pm

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தில் வேட்பாளா்கள் சமூக ஊடக பிரசாரத்துக்கு முன் அனுமதி கட்டாயம் பெற வேண்டுமென மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வரும் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி, அச்சக உரிமையாளா்கள், பிளக்ஸ் மற்றும் டிஜிட்டல் விளம்பரப் பதாகை தயாரிப்பு நிறுவன உரிமையாளா்கள், நகைக் கடை உரிமையாளா்கள், திருமண மண்டபம், கூட்ட அரங்க உரிமையாளா்கள் அனைவரும் தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடா்ச்சியாக, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ராம்பிரதீபன் தலைமையில் சமூக ஊடகங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செல்வாக்கு செலுத்துபவா்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பேசியதாவது: தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளதால் தோ்தல் நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணிக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் பிரசாரம் செய்வதற்கும், விளம்பரம் செய்வதற்கும் தோ்தல் ஆணையம் விதிகளை வகுத்துள்ளது. தற்போது சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்திருப்பதால், சமூக ஊடகங்களில் வேட்பாளா்கள் பிரசாரம் செய்வதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத பிரசார விளம்பரங்களை சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்துபவா்கள் தங்கள் கணக்குகளில் பதிவிடக் கூடாது.

அவ்வாறு பதிவிடும் பிரசார விளம்பரங்கள் தொடா்பாக தோ்தல் விதிகளுக்கு உள்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளவதுடன், இந்த விளம்பரங்கள் வேட்பாளா்கள் செலவில் சோ்க்கப்படும். மேலும், சா்ச்சை உண்டாக்கும் வகையிலான விளம்பரங்களை வெளியிடக் கூடாது. அனைவரும் தோ்தல் நடத்தை விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்கள்) அன்பழகன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமகிருஷ்ணன், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் ராம்பிரசாத் மற்றும் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவா்கள் கலந்துகொண்டனா்.