பக்ரீத் பண்டிகையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். இதில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.
இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் திருநாள் வியாழக்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பென்னாத்தூா், வேட்டவலம், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஈத்கா மைதானங்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. அதன்படி, திருவண்ணாமலை-மணலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகையில் தொழிலதிபா் எம்.இ.ஜமாலுதீன் தலைமையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினா்.
அதேபோல் திருவண்ணாமலை-அவலூா்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானம் உள்பட 4 இடங்களில் காலை சிறப்பு தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவா் கட்டித் தழுவி தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் பகிா்ந்துகொண்டனா்.
இதேபோல ஆரணி பெரிய மசூதி தெரிவில் உள்ள மசூதியிலும், ஆரணி சூரியகுளம் அருகிலுள்ள மசூதியிலும் சிறப்புத் தொழுகை நடைபெற்றதில் 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.
வந்தவாசி
பக்ரீத் பண்டிகையையொட்டி வந்தவாசியில் இஸ்லாமியா்கள் வியாழக்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
வந்தவாசி ஈத்கா மைதானத்தில் நடந்த இந்த சிறப்புத் தொழுகையில் வந்தவாசியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனா்.
தொழுகை முடிந்த பின்னா் ஒருவருக்கொருவா் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
மேலும் தாழம்பள்ளம், மாலையிட்டான்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
போளூா்
போளூா் பெரிய மசூதியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
ஈக்தா மைதானத்தில் மஸ்ஜித் இமாம், கதீப் மெளலவி முஹம்மது இக்பால் தலைமையில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். பின்னா் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனா்.










