மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முதல்படி!

வேலூர், ஜூன் 4: தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் கடைசி மாவட்டமாகத் திகழும் வேலூரில், முதல் முயற்சியாக 6,200 மாணவ-மாணவிகள் பங்கேற்ற கோடைகாலப் பயிற்சி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

Updated On :20 செப்டம்பர் 2012, 12:19 pm

வேலூர், ஜூன் 4: தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் கடைசி மாவட்டமாகத் திகழும் வேலூரில், முதல் முயற்சியாக 6,200 மாணவ-மாணவிகள் பங்கேற்ற கோடைகாலப் பயிற்சி முகாம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

 இம் முகாமை வேலூரில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மே மாதம் நடத்தியுள்ளது.

 இங்குள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் இம் முகாம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது விளையாட்டுத் துறை மேம்பாட்டுக்கான முதல்படியாகக் கருதப்படுகிறது.

 இங்கு சரியான ஓடுதளம் கிடையாது. கூடைப்பந்து, கைப்பந்து விளையாடுவதற்கான திடல் இல்லை. இதனால், மாநில அளவில் விளையாட்டுத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளிக்க முடியவில்லை.

 இருப்பினும், இருக்கும் வசதிகளைக் கொண்டு பளுதூக்குதல் போட்டிகளில் மாநில, தேசிய அளவில் சிறந்த இடத்தை வேலூர் மாவட்ட வீரர்கள் பிடித்துள்ளனர்.

 இங்கு சர்வதே தரத்திலான பயிற்சி மையம் இல்லாத நிலையிலும் ஒலிம்பிக் போட்டிகளில் 5 பேர் பங்கேற்றுள்ளனர். மூவர் அர்ஜுனா விருது பெற்றுள்ளனர்.

 பெரிய மாவட்டமான வேலூரில் இருந்து, மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை சொற்பமாகவே உள்ளது. மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படாததே இதற்குக் காரணம்.

 இக் குறையைப் போக்கும் விதத்தில் முதல் முறையாக மாவட்ட அளவில் 20 வட்டாரங்களில் மொத்தம் 82 மையங்களில் இச் சிறப்பு முகாம் நடந்தது.

 தடகளம், கூடைப்பந்து, கைப்பந்து, டேபிள் டென்னிஸ், கோகோ, ஹாக்கி, வாள்வீச்சு, கராத்தே, குத்துச்சண்டை, சைக்கிள் பயிற்சி, சிலம்பம், ஜிம்னாஸ்டிக், கேரம், பளுதூக்குதல் போன்ற விளையாட்டுகளில் 15 நாள்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், 7 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

 ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், முன்னாள் விளையாட்டு வீரர்கள், மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டுகளுக்கான சங்கங்கள் ஒத்துழைப்புடன் பள்ளிகளின் விளையாட்டுத் திடல்கள், தனியாருக்குச் சொந்தமான இடங்களில் இம் முகாம்களை நடத்தி முடித்திருக்கிறார் மாவட்ட விளையாட்டு அலுவலர் கே.மதிமாறன்.

 இது குறித்து அவர் கூறியது:

 "வட்டார அளவில் மாணவர்களுக்குப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் திறமையான மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாளில் மீண்டும் பயிற்சி அளிக்கப்படும். அதில் சிறந்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். அவர்களை மாநில, தேசியப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது' என்றார்.

 இம் முகாம்களில் அதிக மாணவர்கள் பங்கேற்று, பயிற்சி பெற்றிருப்பது விளையாட்டு மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

 ஆனால், விளையாட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் மாவட்ட நிர்வாகமும் செய்து தர வேண்டும் என்பதே வீரர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.