/

மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் உத்தரவால் அலைக்கழிக்கப்படும் பெற்றோர்!

அரக்கோணம், ஜூன் 26: வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரின் ஒரு உத்தரவால், ஒரு மெட்ரிக் பள்ளியிலிருந்து இன்னொரு மெட்ரிக் பள்ளியில் சேரும் மாணவர்களும் பெற்றோரும் தேவ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:05 pm

எஸ்.சபேஷ்

அரக்கோணம், ஜூன் 26: வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளரின் ஒரு உத்தரவால், ஒரு மெட்ரிக் பள்ளியிலிருந்து இன்னொரு மெட்ரிக் பள்ளியில் சேரும் மாணவர்களும் பெற்றோரும் தேவையற்ற மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

 நிகழாண்டில் மார்ச் 18 தேதியிட்ட அந்த உத்தரவு, மெட்ரிக் பள்ளி முதல்வர், தாளாளர் யாராலும் விளக்க முடியாத அளவுக்கு குழப்பமான உத்தரவாக இருக்கிறது.

 அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

 "...முதல்வரின் கடிதமின்றி பெறப்படும் மாற்றுச் சான்றிதழில் மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் மேலொப்பமிட வாய்ப்பில்லை. தவறாமல் பெற்றோரின் கடிதம் மாற்றுச்சான்றிதழ், ஜெராக்ஸ் நகல், ஆகியவற்றுடன் வருமாறு பெற்றோருக்கு உரிய அறிவுரை வழங்க உரிய பள்ளித் தாளாளருக்குத் தெரிவிக்கப்படுகிறது. ஆய்வாளரின் மேலொப்பம் பெறப்பட்ட பின்னரே மாற்றுப்பள்ளியில் அம்மாணவரின் சேர்க்கை நடைபெற வேண்டும்'

 வழக்கமாக, ஒரு மெட்ரிக் பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு இடமாறும்போது, வெளியேறும் பள்ளியிலிருந்து இடமாற்றுச் சான்றிதழை, சேரும் பள்ளியில் பெற்றோர் கொடுப்பார்கள். அந்தச் சான்றிதழை அப்பள்ளி மாவட்ட மெட்ரிக் ஆய்வருக்கு அனுப்பிவைக்கும். அந்த சான்றிதழில் உள்ள பள்ளி அனுமதி பெற்ற பள்ளிதானா, அந்த மாணவர் அங்கே படித்தார் என்பதை அவர்கள் உரிய ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளார்களா என்று சரி பார்க்க வேண்டியது மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகத்தின் வேலை.

 இதை மெட்ரிக் பள்ளிகள் முறைப்படி ஆய்வாளர் அலுவலகத்துக்கு அஞ்சல் மூலம் அனுப்பவும் செய்கின்றன.

 ஆனால், இந்த வேலை பெற்றோரின் மீது சுமத்துப்பட்டுள்ளது.

 தற்போதைய உத்தரவின்படி ஒரே ஊரில் அடுத்த தெருவில் உள்ள இன்னொரு மெட்ரிக் பள்ளியில் சேர்ந்தாலோ, அல்லது வேறு மாவட்டங்களிலிருந்து இடமாறுதல் காரணமாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வருகின்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பினாலோ, அவர்கள் வேலூர், திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டத்துக்குமான மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றாக வேண்டும்.

 விலகும் பள்ளியின் முதல்வர் கடிதம், இடமாற்றுச் சான்றிதழ், அதன் நகல் ஆகியவற்றுடன் பெற்றோர் திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். அவர் அங்கே இருப்பார் என்று உறுதி இல்லை. அவர் விடுப்பில் இருக்கிறாரா, அல்லது வேறு ஆய்வுகளுக்காக சுற்றிக் கொண்டிருக்கிறாரா என்ற தகவலை திருவண்ணாமலைக்கு அலுவலக நேரத்தில் சென்றால்தான் பெற்றோர் தெரிந்து கொள்ள முடியும். இல்லாவிட்டால், திருவண்ணாமலையில் தங்கி இருந்து வரவேண்டியதுதான்.

 இதுபற்றி மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் ஏ. கலைச்செல்வியிடம் கேட்டபோது, மாணவர்கள் விலகி வந்த மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றவையா என்று உறுதிப்படுத்தத்தான் இந்த உத்தரவு என்கிறார்.

 தமிழ்நாட்டில் எந்தெந்தெந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்றவை என்ற பட்டியலை எல்லா மெட்ரிக் பள்ளிக்கும் அனுப்பினாலே போதும். பட்டியலில் பள்ளியின் பெயர் இருந்தால் இன்னொரு பள்ளி எளிதாக சேர்த்துக்கொள்ளுமே!

 மெட்ரிக் ஆய்வாளரின் தேவையற்ற குழப்ப உத்தரவால், அரக்கோணத்தில் இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சான்றுகளுடன் திருவண்ணாமலைக்கு பல முறை சென்று அலைந்து திரும்ப நேரிடுகிறது. தேவையற்ற பணச்செலவு வேறு.

 ""நீங்கள் போய் அண்ணாமலையாரை கும்பிட்டு வாருங்கள், அதற்குள் மேலொப்பம் வாங்கி வைக்கிறோம்'' என்று சிலரின் "மேல்வரும்படி'க்கும் இந்த உத்தரவு வழிவகுத்துள்ளது என்பதும் நிஜம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.