ஆம்பூரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தற்போது, ஆட்டோ என்பது அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் முக்கிய வாகனமாக மாறியுள்ளது.
அந்த வகையில், வெளியூர்களில் இருந்து ஆம்பூருக்கு வருபவர்களும், ஆம்பூரில் உள்ளவர்கள் நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லவும் பொதுவாக ஆட்டோக்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், மற்ற ஊர்களைக் காட்டிலும் ஆம்பூரில் ஆட்டோ கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நகரில் இயக்கப்படும் ஆட்டோக்களில் மீட்டரே பொருத்தப்படவில்லை எனத் தெரிகிறது.
ஆம்பூரில் பெரும்பாலான ஆட்டோக்கள் எரிவாயு மூலமே இயக்கப்படுகின்றன. பல ஆட்டோக்கள் எரிவாயு உருளை பொருத்துவதற்கான முறையான ஆவணமோ, அனுமதியோ இன்றி இயங்குகின்றன.
மேலும், ஆம்பூரில் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களே தன்னிச்சையாக ஆட்டோ கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்கின்றன.
ஆம்பூர் பேருந்து நிலையத்திலிருந்து குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 40 முதல் ரூ. 50 வரை உள்ளது.
பயணம் செய்ய வேண்டிய தொலைவு அதிகரிக்க, கட்டணமும் அதிகரிக்கிறது.
இதனால், ஆட்டோவைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பொருளாதார ரீதியாக பெரும் சிரமம் ஏற்படுகிறது.
இதன் காரணமாக, ஆம்பூரில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு அவர்களுடைய உறவினர்கள் ஆட்டோவில் வரத் தயங்குகின்றனர்.
எனவே, போக்குவரத்துத் துறையும், காவல் துறையும் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதா எனவும், முறையான கட்டணம் வசூலிக்கப்படுகிறதா எனவும் சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், முறைகேடாக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.