/

குப்பை வண்டியில் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம்: வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ்

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் குப்பை வண்டியில் முதியவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி மாநில மனித உரிமை

Updated On :6 ஏப்ரல் 2018, 3:23 am IST

வேலூர் மாவட்டம், சோளிங்கரில் குப்பை வண்டியில் முதியவரின் சடலம் எடுத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக, வேலூர் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்கக் கோரி மாநில மனித உரிமை ஆணையம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
வேலூர் மாவட்டம், சோளிங்கர் தபால் நிலையத் தெருவில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் கடந்த மார்ச் மாதம் 27 -ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து சோளிங்கர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் முதியவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இறந்து கிடந்தவரின் பெயர் ராஜாராம் என்பதும், குடும்பத்தைப் பிரிந்து அப்பகுதியில் வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. 
பின்னர், அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. தொலைவில் உள்ள மயானத்துக்கு, சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான குப்பை வண்டியில் முதியவரின் சடலம் கடந்த 2-ஆம் தேதி எடுத்துச் செல்லப்பட்டது. 3 சக்கர சைக்கிள் போன்ற அந்த வண்டியில் வெள்ளைத் துணியால் சுற்றப்பட்டுள்ள சடலத்தின் ஒரு பகுதி வெளியே தெரிந்ததால், அச்செய்தி படத்துடன் பத்திரிகைகளில் வெளியானது.
தாமாக முன் வந்து விசாரணை: சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதை விசாரித்த ஆணையத்தின் தலைவி மீனாகுமாரி, இந்த விவகாரம் தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர், பேரூராட்சிகளின் இயக்குநர் ஆகியோருக்கு 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.